பழநி : பழநி அருகே கோம்பைபட்டியில் காட்டு யானைகள் தென்னை, மக்காச்சோள பயிர்களை நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பழநி, ஒட்டன்சத்திரம் வனச்சரகங்களுக்குட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பயன் ஏமில்லை. பழநி அருகே ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட கோம்பைபட்டி கிராமத்தில் கரும்பு மற்றும் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக 4 காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களுக்குள் புகுந்து வந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த காட்டு யானை கூட்டம் கோம்பைபட்டியில் உள்ள குணசேகரன், பிரபு ஆகியோரது தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை மற்றும் மக்காச்சோள பயிர்களை நாசம் செய்து சேதப்படுத்தி உள்ளன.இதுகுறித்து கோம்பைபட்டியை சேர்ந்த துரை கூறியதாவது:எங்கள் பகுதிக்குள் காட்டு யானைகள் அதிகளவு வருகின்றன. சில சமயம் கூட்டமாகவும், சில முறை ஒற்றையாகவும் வந்து தொல்லை தருகின்றன. காட்டு யானைகள் பயிர்கள், வீடுகளை சேதப்படுத்துகின்றன. எனவே வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் சேதமடைந்த பயிர்கள், வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.