×

கல்வராயன்மலையில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு

சின்னசேலம் : கல்வராயன்மலையில் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் வரலாறு ஆய்வு மையத்தினர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள தும்பராம்பட்டுக்கு அருகில் உள்ள தொட்டிமடுவு என்னுமிடத்தில் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான பாறை செதுக்கு ஓவியங்களை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின் தொடர் களப்பயணத்தின் போது நடுவத்தை சேர்ந்தபாலமுருகன், பழனிசாமி, டாக்டர்.அருண்குமார், விக்னேஷ்வரன், சிற்றிங்கூர் ராஜா ஆகியோர் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது, பொதுவாக பாறையில் காணப்படும் கற்கீரல்கள், பாறையின் சுவர் அல்லது கூரைப்பகுதிகளிலேயே வரையப்படும். ஆனால் இங்கு தரைப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விடம் நீரோடைக்கு அருகாமையிலேயே வரைந்திருப்பது சிறப்பாகும். நீர் வரத்து அதிகமாக வரும் காலங்களில் இந்த ஓவியங்களுக்கு மேலே தண்ணீர் செல்லும் என்பதனை அறிந்தும் ஓவியர் இங்கு செதுக்கியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். வண்ணக்கலவை கொண்டு வரைந்திருந்தால் அவை அழிந்துவிடும் என்பதால் இங்கு கற்செதுக்குகளாக வரைந்துள்ளனர்.

இங்கு 10க்கும் மேற்பட்ட உருவங்கள் வரையப்பட்டிருப்பினும் சுமார் 7 உருவங்களே காணும் நிலையில் உள்ளன. அவற்றில் திமில் உள்ள மாடு, மான், பன்றி, நாய் போன்ற விலங்குகளும், அவற்றிற்கு அருகே கையில் வில் மற்றும் அம்புடன் மனித உருவமும், ஆயுதங்கள் இன்றி சில மனித உருவங்களும் காணப்படுகின்றன. இங்கு வரையப்பட்ட கற்செதுக்குகள் பல கோட்டோவிய முறையில் காணப்படுகிறது. மேலும் உடல் முழுவதும் அல்லது உடலில் சிறு பகுதிகளிலும் உடல் பகுதி செதுக்கப்பட்டும் காணப்படுகிறது. இங்கு காணப்படும் ஓவியங்களில், வேட்டைச்சமூகம் மற்றும் புதிய கற்கால கால்நடை சமூகத்தின் வாழ்க்கை சூழலை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.

மேலும், இங்குள்ள கற்செதுக்குகள், கர்நாடக பகுதியில் உள்ள குப்கல், தருமபுரிக்கு அருகேயுள்ள சிலநாயக்கனூர் வனப்பகுதியில் கிடைத்த கற்செதுக்குகளுக்கும், கரிக்கையூர், செஞ்சி அருகேயுள்ள நல்லான் பிள்ளை பெற்றாள், செத்தவரையில் உள்ள சில ஓவியங்களை ஒத்த வடிவத்தில் காணப்படுகிறது. காட்சி அமைப்பில் மற்றும் உருவத் தோற்றத்தின் அடிப்படையில் இவை சுமார் 4,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும். இதுபோன்று தமிழகத்தில் மிக அரிதாகவே காணப்படும் வரலாற்று காலத்துக்கு முந்தைய தடயங்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பது அவசியம் என கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் முக்கால நடு தெருக்கள் மற்றும் ஆதி பழங்குடியினர் வசிப்பிடங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நேரங்களில் பாறை ஓவியங்கள் கண்டெடுத்திருப்பது அப்பகுதி மக்களிடையே மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Galvarayanmountain , Chinnasalem: About 4,000 years old rock paintings have been found in Kalvarayanmalai by the history research center.
× RELATED கல்வராயன்மலையில் கனமழை; கொசப்பாடி ஏரி...