சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாட்கள் அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து நேற்று யாழ்ப்பாணத்திற்கு சென்றனர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு எல்.முருகன் அளித்த பேட்டி: 3 நாள் அரசு பயணமாக இலங்கை செல்கிறோம். பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய யாழ்ப்பாணம் கலாச்சார கட்டிடம் இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. நாளை இது மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.மேலும் அரசு சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இலங்கையில் தமிழ் தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார். அமைச்சர் எல்.முருகனுடன் தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலையும், யாழ்ப்பாணம் சென்றார்.