தண்டையார்பேட்டை: காசிமேட்டில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மற்றும் 7 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காசிமேடு ஜிஎம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (55). இவருடைய கணவர் சங்கர். இவர்கள், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர், நேற்று காலையில் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்து ரூ.2 லட்சம், 7 சவரன் நகை ஆகியவை திருடு போனது தெரிந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இதுகுறித்து காசிமேடு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதில், ஒரு வீட்டில் இருந்து ரூ.2 லட்சம், 7 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது, மேலும், இன்னொரு வீட்டின் இருந்தவர்கள் ஊருக்கு சென்றதால், அந்த வீட்டின் என்ன கொள்ளை போனது என்பது தெரியவில்லை.
அதன்பேரில் மோப்பநாய், கைரேகை நிபுணர்களை வரவைத்து அங்கிருந்து கைரேகை எடுக்கப்பட்டது. அதில் சம்பந்தமில்லாமல் 3 பேருடைய கை ரேகை பதிவாகி உள்ளது. அது கொள்ளையர்களின் கைரேகையா என்பது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.