சென்னை: காவலர் மற்றும் பொதுமக்கள் இடையிலான தொடர்பை மேம்படுத்த ‘அன்பான அணுகுமுறை’ என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவலர்கள், பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவதற்கு ஏதுவாகவும், காவலர் பொதுமக்கள் இடையிலான தொடர்பினை மேம்படுத்தவும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 1.20 லட்சம் காவலர்களுக்கு, பொதுமக்களுடனான தொடர்பை பேணுவதற்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக அரசாணை கடந்த 30.11.2021 அன்று பிறப்பிக்கப்பட்டு ‘அன்பான அணுகுமுறை’ என்ற தலைப்பில் பயிற்சி வழங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் முன்னோட்ட பயிற்சி தொடக்க விழா தலைமை செயலாளர் இறையன்புவால் கட்டமைக்கப்பட்டு, நேற்று அண்ணா நிர்வாக பயிற்சி கல்லூரியில் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் மனிதவள மேலாண்மை துறை செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன் முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் காவலர் நலன் டிஜிபி கருணா சாகர், காவலர் உயர் பயிற்சியகம் கூடுதல் டிஜிபி ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.