புதுடெல்லி: சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரிடம் கனிமொழி எம்.பி, எழுத்துபூர்வமாக சில கேள்விகளை எழுப்பினார். அதன் விவரம்: “டிஜிட்டல் ஆளுகைக்கான முன் முயற்சிகள் நாட்டின் மாற்றுத் திறனாளி மக்களுக்கு குறிப்பாக பார்வை மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவில்லை என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா, இல்லையென்றால், அதற்கான காரணங்கள் என்ன?” என்று கேள்விகளை கேட்டிருந்தார் கனிமொழி எம்பி.
இதற்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ஏ. நாராயணசாமி அளித்த பதிலில், “ஒன்றிய அரசு 19.04.2017 அன்று முதல் மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ளது. இச்சட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. மத்திய அரசின் அமைச்சகங்கள்/துறைகளின் 95 இணையதளங்கள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அமைக்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளித்தல் துறை பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 632 இணையதளங்களையும் மாற்றுத் திறனாளிகள் அணுகக் கூடியதாக மாற்றியுள்ளது. மேலும், சுகம்யா பாரத் ஆப் என்ற க்ரவுட் சோர்சிங் மொபைல் செயலியை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி பொது மையக் கட்டமைப்பு, வசதிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும் போது எதிர்கொள்ளும் அணுகல் தொடர்பான சிக்கல்களை தீர்க்க உதவுகிறது. எவரும், எங்கும், எந்த நேரத்திலும் பயன்படுத்துவதை இச்செயலி உறுதிப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.