×

அதிமுக பணம் வழங்குவதாக வந்த புகார் எதிரொலி : ஈரோடு வைராபாளையத்தில் உள்ள மண்டபத்திற்கு சீல் வைப்பு!!

ஈரோடு : ஈரோடு மாவட்டம் வைராபாளையத்தில் அனுமதின்றி அதிமுகவினர் கூட்டம் நடத்த பயன்படுத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில் பணப்பட்டுவாடா நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

குறிப்பாக அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்துவருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் வைராபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தை அதிமுகவினர் அலுவலகமாக பயன்படுத்திவருவதாகவும் மண்டபத்தில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் மண்டபத்தை சோதனை செய்வதற்காக சென்றனர். சோதனைக்கு வந்த அதிகாரிகளை மண்டபத்துக்குள் விடாமல் அதிமுகவினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக மண்டபத்தில் இருந்த அதிமுகவினரை வெளியேற்றி சீல் வைத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.அனுமதி இல்லாமல் அதிமுக ஆலோசனை நடத்தியதாக கூறி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் சீல் வைத்தார்.


Tags : ADMK ,Virapalayam ,Erode , AIADMK, money, complaint, Erode, seal
× RELATED விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும்...