ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை தொடர்பாக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றிக்கான வியூகங்கள் குறித்து பழனிச்சாமி ஆலோசித்து வருகிறார். வேட்புமனு மீதான பரிசீலனை இன்று நடைபெறும் சூழலில் பரப்புரையை தீவிரப்படுத்த அதிமுக முடிவு செய்துள்ளது. இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2023 பிப்ரவரி 27 அன்று நடைபெறுகிறது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது.ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக வேட்பு மனு செய்தனர்.கடந்த 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் வரை 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகே உள்ள அ.தி.மு.க. தலைமை தேர்தல் பணிமனையில் இருந்து ஊர்வலமாக காரில் வந்தார். மாநகராட்சி அலுவலகத்துக்கு 200 மீட்டர் தூரத்தில் இருந்து வேட்பாளர் தென்னரசு மற்றும் உடன் செல்லும் 4 பேர் மட்டுமே காரில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுடன் அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா உள்பட 4 பேர் வந்தனர். அவர்கள் வேட்பு மனுவை அதிகாரிகளிடம் வழங்கி சரிபார்த்தனர். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமாரிடம் வேட்பு மனுவை தென்னரசு வழங்கினார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் பொதுக்குழு ஆதரவு காரணமாக இரட்டை இலை சின்னம் கிடைத்த உற்சாகத்தில் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரை தொடர்பாக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றிக்கான வியூகங்கள் குறித்து பழனிச்சாமி ஆலோனை மேற்கொண்டு வருகிறார்.