கராச்சி: உடல்நலக்குறைவால் இறந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்பின் இன்று மாலை அடக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் 1999ம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் நவாஷ் ஷெரிப் ஆட்சியைக் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றிய முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் (79), கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாயில் வசித்து வந்தார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் நேற்று முன்தினம் காலமானார்.
அவரது உடலை துபாயில் இருந்து பாகிஸ்தான் கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், உரிய நேரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று பர்வேஸ் முஷாரப்பின் உடல் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. கராச்சியில் உள்ள ராணுவ கன்டோன்மென்ட் பகுதியில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக முஷாரப்பின் மனைவி சபா, மகன் பிலால், மகள் மற்றும் பிற நெருங்கிய உறவினர்கள் மால்டா விமானத்தின் மூலம் கராச்சி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.