ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பணி தொடர்பாக திமுக ஆதிதிராவிட நலக்குழு செயல்வீரர்கள் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, ‘‘கடந்த 2016ம் ஆண்டு வரை அருந்ததியர் வாக்குகள் 85 சதவீதம் அதிமுக ஆதரவாக இருந்தது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்த சமுதாய மக்களின் 85 சதவீதம் வாக்குகள் அப்படியே திமுகவுக்கு கிடைத்தது. நடைபெற உள்ள தேர்தலில் 100 சதவீதமும் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.
கலைஞர் ஆட்சி காலத்தில் அருந்ததியின மக்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள் ஒதுக்கீட்டால் அந்த சமுதாய மக்கள் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தற்போது மருத்துவ படிப்பில் 1120 அருந்ததியின மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். இதேபோல பொறியியல் படிப்பில் 4 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். குரூப் 1 தேர்வு மூலம் ஆண்டுக்கு 50 பேர் உயர் அதிகாரிகளாக பணியில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவற்றையெல்லாம் வீடு வீடாக சென்று அருந்ததியின சமுதாய மக்களுக்கு விளக்கி வாக்கு சேகரிக்க வேண்டும்’’ என்றார்.