ஊட்டி : ஊட்டி எல்க்ஹில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் தைப்பூச திருத்தேர் விழா நேற்று நடைபெற்றது. ஊட்டியில் இயற்கை எழில்சூழ்ந்த பகுதியான திருமான் குன்றம் என்று அழைக்கப்படும் எல்க்ஹில் மலையில் எழுந்தருளியுள்ள 95 ஆண்டுகள் பழமையான பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் பிரபலமான மலேசியா முருகன் கோயிலில் உள்ளதை போன்ற 44 அடி உயர முருகன் சிலை உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று நடக்கும் தைப்பூச திருத்தேர் ஊர்வலம் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருத்தேர் விழா கடந்த மாதம் 26ம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து கடந்த 4ம் தேதி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக பூஜைகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று காலை 5 மணியில் இருந்து 8.15 மணி வரை 11ம் நாள் பூஜை, பெருந்திரு முழுக்காட்டல் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 11.55 மணியளவில் தைப்பூச திருத்தேர் ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, எஸ்பி பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த முருகன் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் அங்கிருந்து ஊட்டி நகரில் மாரியம்மன் கோயில், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலம் வந்து மீண்டும் மாலையில் கோயிலை சென்றடைந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தாிசனம் செய்தனர். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து இன்று 12ம் நாள் மறுஅபிஷேகமும், நாளை விடையாற்றி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெகநாதன் செய்திருந்தார். இதேபோல் அப்புகோடு ஆனந்தமலை முருகன் கோயில், மஞ்சூர் அருகேயுள்ள அன்னமலை முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தைப்பூசம் வெகுசிறப்பாக நடந்தது.