கும்பகோணம்: அதிமுகவில் நிலவும் குழப்பத்திற்கெல்லாம் மூல காரணம் பாஜவேதான் என கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் இல்ல திருமண விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கும்பகோணத்திற்கு நேற்று வந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இளங்கோவன் மாபெரும் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மிகுந்த ஒற்றுமையோடும், கொள்கை உணர்வோடும் எந்த குழப்பமும் இல்லாமல் இந்த தேர்தலை எதிர்கொள்கிறோம்.
ஆனால் எதிரணியில் வேட்பாளர் அறிவிப்பதில் உலக நாடுகளில் உள்ள குழப்பங்களை விட பெருங்குழப்பம் நீடிக்கிறது. இந்த குழப்பத்திற்கெல்லாம் காரணம் தமிழ்நாடு பாஜ தான். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஒன்று சேரக்கூடாது என்பதில் அண்ணாமலை குறியாக உள்ளார். இதில் பாஜவிற்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் என்னவென்றால், தற்போது எந்த அதிமுக அணி அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிப்பது என தெரியாமல் ஒரு நரியை போல பாஜவினர் தத்தளிக்கின்றனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஏற்கனவே பாஜவை கவனத்துடன் அணுகுகிறோம் என்று சொல்லி இருந்தார். ரொம்ப கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.