வாணியம்பாடி: கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சம்பவத்தில் கைதான தனியார் நிறுவன உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நேற்று முன்தினம் தனியார் நிறுவனத்தின் சார்பில், நடைபெற்ற இலவச புடவைகளுக்கான டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் பரிதாபமாக பலியாகினர். மேலும், 12 பெண்கள் பலத்த காயமடைந்து வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், தனியார் நிறுவன உரிமையாளர் ஐயப்பன் கைது செய்யப்பட்டார். அவரை வாணியம்பாடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் நேற்று முன்தினம் இரவு வாணியம்பாடி நகர போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ஐயப்பனை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை நேற்று அதிகாலை வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.