கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சியில், காயரம்பேடு, மூலக்கணி, விஷ்ணுப்பிரியா நகர், தமிழ்ச்செல்விநகர், கண்ணன் நகர், வீனஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு வீனஸ்நகர் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு 64 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ7 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டுமான பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் வீடுகள் கட்டும் பணிகளை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் நேற்று திடீரென ஆய்வு செய்தார். பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டார். வீடுகள் கட்டும் பணியை தரமாகவும், உரிய நேரத்தில் முடிக்கும்படியும் அறிவுறுத்தினார். அவருடன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடராகவன், சாய்கிருஷ்ணன், ஊராட்சி தலைவர் ஜெயகாந்தி புஷ்பராஜ், துணை தலைவர் திருவாக்கு, கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி, 4வது வார்டு உறுப்பினர் பூபாலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.