சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு ஆகியவை பிரதான ஆறுகளாக உள்ளது. இதில் மாவட்ட எல்லையான கேசாவரம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் இருந்து பிரிந்து கூவம் ஆறாக தொடங்கி புதுமாவிலங்கை, அதிகத்தூர், ஏகாட்டூர், திருவள்ளூர், கொரட்டூர், தண்டுரை, பருத்திப்பட்டு, கண்ணப்பாளையம், ஆவடி வழியாக சென்று சென்னை மாநகரின் வேலப்பன்சாவடி, கோயம்பேடு, சூளைமேடு, மவுண்ட்ரோடு கல்லூரி சாலை, நேப்பியர் பாலம் வழியாக 72 கி.மீ. சென்று கடலில் கலக்கிறது.
இதனால் தமிழகத்தில் நீராதாதாரத்தப் பெருக்க புண்ணிய நதியான கூவம் ஆற்றில் புதிய தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், அதிகத்தூர் கிராமம் அருகில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத் துறை மூலம் சுமார் 200 மீட்டர் நீளம், 1.50 மீட்டர் உயரத்தில் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளுர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டி, இனிப்புகள் வழங்கினர். கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், அதிகத்தூர் கிராம எல்லையின் அருகே உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே நீர்வளத்துறை மூலம் ரூ..17.70 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
இத்தடுப்பணையானது 200 மீட்டர் நீளத்திலும், 1.50 மீட்டர் உயரத்திலும் அதிகத்தூர் - ஏகாட்டூர் கிராம எல்லை பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படவுள்ளது. இத்தடுப்பணை அமைவதன் மூலம் அருகில் உள்ள கிராமங்களான அதிகத்தூர், ஏகாட்டூர், சேலை, தண்டலம் மற்றும் கடம்பத்தூர் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்த்துளை கிணறுகள் மூலம் சுமார் 540 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயன்பாடு அதிகரிப்பதோடு, கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியாக ஏதுவாக அமையும். இத்தடுப்பணை கட்டப்படுவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
இவ்விழாவில், திருவள்ளுர் கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சி.பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் எம்.பி.சத்தியநாராயணன், உதவி பொறியாளர்கள் லோகரட்சகன், செல்வகுமாரி, ரமேஷ், கவுரிசங்கர், திமுக மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
