×

மாங்காட்டில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்

குன்றத்தூர்: மாங்காட்டில் நீண்டகாலமாக வரிசெலுத்தாத 2 கடைகளுக்கு  நகராட்சி அதிகாரிகள் சீல்வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அடுத்த மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள், வணிக வளாகங்கள், வீடுகள் ஏராளமாக உள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் சிலர் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.  தொழில் வரி, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட   வரிகளை வசூல் செய்யும் பணியில் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மாங்காட்டில் 2 கடை உரிமையாளர்கள் நீண்ட காலமாக வரிபாக்கி வைத்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை நகராட்சி ஆணையர் சுமா மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

பின்னர், வரி செலுத்தாத 2 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும் மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு வாசிகள் சிரமமின்றி வரி செலுத்த வசதியாக ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வீடுகளுக்கே சென்று வரி வசூல் செய்து வருகின்றனர். குறிப்பாக, ஒரு கோடிக்குமேல் வரி பாக்கி நிலுவையில் இருப்பதால் அவற்றை வசூலிக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Tags : Mangat , Mangadu, duty-free, shops sealed
× RELATED சின்னத்தை மாற்றிக் கூறி வாக்கு...