சென்னை: ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட கரீம் மொய்தீன் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், வார்டு-63 கரீம் மொய்தீன் தெருவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குழந்தைகளுக்கு பழம், பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை வழங்கினார். மேலும், அங்கன்வாடி பணியாளர்களிடம் அவர் கலந்துரையாடி, இந்த மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளவும், ஊட்டச்சத்து உணவை சிறப்பாக வழங்கவும் அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நிலைக்குழு தலைவர் (பணிகள்) சிற்றரசு, வடக்கு வட்டார துணை ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன், தேனாம்பேட்டை மண்டல குழு தலைவர் மதன்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.