×

திருமணம் முடித்த கையோடு உறவினர்கள் புடைசூழ மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து சென்ற மணமகன்: மாதவரத்தில் ருசிகர சம்பவம்

புழல்: மாதவரம் அருகே திருமணம் முடிந்த கையோடு உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ மணமகளை ரேக்ளா வண்டியில் மணமகன் அழைத்து சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் புதுமண தம்பதிகள், தங்களது திருமண நிகழ்வை ஏதாவது ஒரு வகையில் வித்தியாசமாக நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். குறிப்பாக, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது, வானில் பறந்தபடி திருமணம் செய்வது உள்ளிட்ட வகையில் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஒரு புதுமண தம்பதி ரேக்ளா வண்டியில் சென்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர். மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியை சேர்ந்த விவசாயி கோபால் - கண்ணகி ஆகியோரின் மகன் விஜய்க்கும், ஆனந்தன்-மேரி ஆகியோரின் மகள் ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு குலதெய்வம் கோயிலில் நேற்று திருமணம் நடந்தது.

மணமக்கள் வீடு திரும்பும்போது கிராம பாரம்பரியத்தை மறக்காமல் இருக்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒரு வித்தியாசமான ஏற்பாடு செய்தனர். இதையடுத்து இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட ரேக்ளா வண்டியில் மணமகளை ஏற்றிக்கொண்டு உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ ரேக்ளா வண்டியை மணமகன் ஓட்டிச்சென்றார். அப்போது உறவினர்களும், நண்பர்களும் மணமக்கள் மீது மலர் தூவி வாழ்த்தியபடி அவர்களுடன் சென்றனர். ஆடம்பர காரில் ஊர்வலமாக சென்று திருமணம் செய்யும் இந்த காலத்தில், திருமணம் முடிந்த கையோடு ரேக்ளா வண்டியில் மணமகளை அழைத்து சென்ற சம்பவம் மாதவரம் அருகே ருசிகரத்தை ஏற்படுத்தியது.

Tags : Rekla ,Madhavaram , The groom took the bride in a Rekla cart surrounded by her relatives after the wedding ceremony: a delicious incident in Madhavaram
× RELATED காக்கி சீருடை அணிந்து வாகன சோதனை;...