சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், மாதேபள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அருள்மிகு சக்கி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் ஆக்கிரமித்து உள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை அறநிலையத்துறை அகற்ற கூடாது என்பதற்காக தனக்கு சொந்தமான நிலத்தை சட்ட விரோதமாக எடுப்பதற்கு அறநிலையத்துறை முயற்சிப்பதாக கூறி தேசிய பட்டியலின ஆணையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த ஆணையம், ஆக்கிரமிப்பை அகற்த எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனஅறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. உண்மை விவரங்கள் தெரியாமல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சிவில் நீதிமன்றத்தின் உரிமையை ஆணையம் எடுத்துக்கொள்ள அதிகாரம் இல்லை என்பதால் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பை அகற்ற கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க தேசிய பட்டியலின ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற தேசிய பட்டியலின ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்கலாம். இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தவிட்டு விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.