சென்னை: சென்னை இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட கரீம் மொய்தீன் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (02.02.2023) குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-63க்குட்பட்ட கரீம் மொய்தீன் தெருவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (02.02.2023) குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் குழந்தைகளுக்கு பழம், பிஸ்கெட் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வழங்கினார்.
மேலும், அமைச்சர் அங்கன்வாடிப் பணியாளர்களிடம் கலந்துரையாடி, இந்த மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளை நல்ல முறையில் கவனித்து கொள்ளவும், ஊட்டச்சத்து உணவினை சிறப்பாக வழங்கிடவும் அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே. சிற்றரசு, வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், தேனாம்பேட்டை மண்டலக் குழுத் தலைவர் எஸ். மதன்மோகன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.