×

திருமணமான பெண்ணுடன் தனிகுடித்தனம் நடத்திய; வாலிபர் கொலையில் பெண்ணின் 2 சகோதரர்கள், ஆட்டோ டிரைவர் கைது

புழல்: திருமணமான பெண்ணுடன் தனிக்குடித்தனம் நடத்திவந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக பெண்ணின் 2 சகோதரர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். சென்னை ஆவடி லட்சுமிபுரத்தில் வசித்துவந்தவர் சுதாசந்தர் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதத்துக்கு முன் செங்குன்றம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் வாடகை  வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி இரவு சுதாசந்தர் ஒரு ஆட்டோவில் ஒரு இளம்பெண்ணுடன் புழல் அடுத்த விநாயகபுரம் கல்பாளையம் சாலையில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் பைக்கில் வந்த ஒரு கும்பல் ஆட்டோவை  மறித்து நிறுத்தி சுதாசந்தருடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் கத்தியால் சுதாசந்தரின் தலை, கழுத்து உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை பார்த்து இளம்பெண் கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் புழல் போலீசார் சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். முன்னதாக போலீசார் நடத்திய விசாரணையில், சுதா சந்தருடன் ஆட்டோவில் சென்ற இளம்பெண்  ஆவடியை அடுத்த மோரை பகுதியை சேர்ந்த ராகிணி என்று தெரியவந்துள்ளது. ராகிணியை கடந்த 3 வருடங்களாக  சுதாசந்தர் காதலித்துள்ளார். இது பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததும் கடந்த ஒரு வருடத்துக்கு முன் ராகிணிக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைத்துவிட்டனர். இதன்பிறகு சுதாசந்தர், ராகிணியுடன் ஆவடியில் வசித்துவிட்டு கடந்த 2 மாதத்துக்கு முன்புதான் செங்குன்றம் லட்சுமிபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்’ என்று தெரியவந்தது. இந்த நிலையில், சுதாசந்தர் கொலை தொடர்பாக ராகிணியின் அண்ணன்கள் ஆவடி அருகே வெள்ளச்சேரி பகுதியை சேர்ந்த பரத் என்கிற ராபின் (30), உதயா (32) மற்றும் ஆட்டோ டிரைவர் கார்த்திக் (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Had an extramarital affair with a married woman; Woman's 2 brothers, auto driver arrested in teenager's murder
× RELATED பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த...