டெல்லி: புதிய வருமானவரி கணக்கீட்டு முறையை மூடியிருந்த திரை மெல்ல விலகுவதால் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். வருமான வரி கணக்கீடு தொடர்பாக நாளிதழ்களில் வந்துள்ள பட்டியலை பகுத்தாய்ந்து முடிவு செய்ய பா.சிதம்பரம் அறிவுரை வழங்கியுள்ளார். ஆண்டு வருமானம் ரூ.35 லட்சம் வரை உள்ளவர்களுக்கு பழைய வரி கணக்கீட்டு முறையே பயன் தருவதாக தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2 கோடி வரை இரு கணக்கீட்டு முறையிலும் வேறுபாடு இல்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் கூறியுள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.60 லட்சம் வரை பழைய வருமான வரி கணக்கீட்டு முறையே ஆதாயமானது என்று எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது. எனவே வருமான வரி செலுத்துவோர் பட்டியல் கணக்காளரை கலந்து ஆலோசித்து ஆராய்ந்து சரியான திட்டத்தை தேர்வு செய்ய ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். வரி கணக்கீட்டு முறை விவாதத்தால் பட்ஜெட்டில் தனிநபர் சேமிப்புக்கு முக்கியத்துவம் குறைப்பு கவனம் பெறாமல் போய்விட்டது. பெரும்பான்மை மக்களுக்கு அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் இல்லாத நிலையில் தனிப்பட்ட சேமிப்பே பாதுகாப்பை தரும் எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.