சென்னை: இந்திய கடலோர காவல்படையின் 46வது எழுச்சி தினத்தை முன்னிட்டு, மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில், கடல் அலையில் சிக்கியவர்களை மீட்பது, ஊடுருவலை தடுப்பது என பாதுகாப்பு ஒத்திகையில், ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டன. இந்திய கடலோர காவல்படையின் 47வது எழுச்சி தினம், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால், கடலோர காவல்படை சார்பில் 2 நாள் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணி ஒத்திகை நடந்து வருகிறது. அந்த வகையில் இந்திய கடலோர காவல்படையின் ரோந்து கப்பல்கள், ஹெலிகாப்டர் மூலம் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையோரம் தங்களது ரோந்து கப்பகளை நிறுத்தி, பொதுக்கள் கடல் அலையில் சிக்கினால் அவர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து நடித்து காட்டினர்.
அப்போது, அலையில் அதிக தொலைவிற்கு அடித்து செல்லப்பட்ட நபர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது போன்றும், ரப்பர் படகுகள் மூலம் கடற்கரையோரங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்வது ஊடுருவலை தடுப்பது போன்ற ஒத்திகையில், இந்திய கடலோர காவல்படையினர் நிகழ்ச்சியை நடத்தினர். இரவு நேரத்தில், இந்திய கடலோர காவல்படையின் கப்பல்களை மெரினா மறறும் எலியட்ஸ் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டு வண்ண விளக்குளால் அலங்கரித்து காட்சிப்படுத்தப்பட்டது. இதை மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.