குன்னூர்: குன்னூர் ஜெகதளா பேரூராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதில்லை என புகார் கூறி திமுக கவுன்சிலர்கள் இரண்டு பேர் உட்பட 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர் ஜெகதளா பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த பங்கஜம் உள்ளார். நேற்று பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு சரிவர பணிகள் ஒதுக்குவதில்லை, வளர்ச்சப் பணிகள் ஒதுக்கினாலும் அதற்கான நிதி ஒதுக்குவதில்லை என கூறி திமுக கவுன்சிலர்கள் திலீப், பரிமளம் ஆகியோர் இரண்டு பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர் சஜீவனும் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர் அதில் உடன்பாடு ஏற்படவில்லை தாசில்தார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் தான் இந்த இடத்தை விட்டு நகர்வோம் என கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினர்களின் வார்டுகளுக்கு ரூ.8 லட்சம் நிதியை சரிசமமாக பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த தொகை வேண்டாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து உறுப்பினர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’, என தெரிவித்தனர்.