×

தற்கொலை செய்துகொண்ட ‘டிக்டாக்’ புகழ் ரமேஷ் வீடியோவால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை

பெரம்பூர்: புளியந்தோப்பு கேபி பார்க் குடிசை மாற்று வாரிய பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ் (42). சினிமா படங்கள் மற்றும் சின்ன திரையில் நடன கலைஞர். சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தில் நடித்துள்ளார். பல சினிமா பாடல்களுக்கு நடனமாடி டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலம் அடைந்தவர். , திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள், மூர்மார்க்கெட் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் வசித்து வரும் இன்பவள்ளி என்ற பெண்ணுடன் ரமேஷுக்கு பல வருடங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு, அந்த பெண்ணை 2வது திருமணம் செய்துகொண்டு, புளியந்தோப்பு பகுதியில் ரமேஷ் வசித்து வந்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரமேஷின் முதல் மனைவி சித்ரா, தனது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பிறகு காவல் நிலையத்திற்கு வந்த ரமேஷ், இனி முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். ஆனால், மீண்டும் 2வது மனைவியுடன் அவர் வாழ்ந்து வந்தார். கடந்த 27ம்தேதி மாலை 5 மணியளவில் புளியந்தோப்பு கேபி பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் 10வது மாடியில் இருந்து ரமேஷ் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதை அறிந்த அவரது முதல் மனைவி, தனது கணவர் ரமேஷ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, பேசின்பிரிட்ஜ் போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்து தற்கொலை வழக்காக பதிவு செய்து, ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்குப்பின் முதல் மனைவியிடம் கொடுத்தனர். இந்நிலையில், ரமேஷ் தனது 2வது மனைவி இன்பவள்ளி வீட்டில் இருக்கும்போது குடிப்பதற்கு பணம் கேட்கிறார். அப்போது 2வது மனைவி ரமேஷை அடிக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தையும் வீட்டில் உள்ள ஒரு பெண் வீடியோ எடுக்கிறார். அப்போது, ரமேஷ், ‘நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’ என்று கூறுகிறார்.

உடனே, 2வது மனைவி இன்பவள்ளி தாராளமாக தற்கொலை செய்துகொள் என தெரிவிக்கிறார். அங்கு இருக்கும் சகபெண் ஒருவர் கயிறு வேண்டுமா என கேட்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது. அந்த வீடியோவில் பேசும் ரமேஷ், ‘என்னை வேலைக்கு செல்ல சொல்கிறார்கள். இதற்கு மேல் என்னால் வேலை செய்ய முடியாது, குடிப்பதற்கு பணம் தர மறுக்கிறார்கள். அதனால், நான் சாகப் போகிறேன்’ என கூறுகிறார். ரமேஷ்  தற்கொலை செய்துகொண்ட அன்று இந்த வீடியோ எடுக்கப்பட்டது போன்று தெரியவில்லை. தற்கொலை செய்துகொண்ட அன்று ரமேஷ் முழு பேண்ட் அணிந்திருந்தார்.

ஆனால், வீடியோவில் லுங்கி அணிந்து ரமேஷ் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார். எனவே, இந்த வீடியோ ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோ போன்று தெரிகிறது. தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போலீசார் வட்டாரத்தில் விசாரித்தபோது, இந்த வீடியோ கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ரமேஷின் 2வது மனைவி இன்பவள்ளி அரக்கோணத்தில் இருக்கும்போது எடுத்த வீடியோ. தற்போது ரமேஷ் உயிரிழந்த நிலையில், சிலர் வேண்டுமென்றே அவரின் பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக தெரித்தனர்.

Tags : Ramesh , 'TikTok' fame Ramesh's video of suicide causes stir: Police are investigating
× RELATED சொல்லிட்டாங்க…