ஈரோடு: ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி பொருளாளர் மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். ஈரோடு, முனிசிபல் காலனி, கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன்கள் கெளதம் (30), கார்த்தி (26). இருவரும் ஆர்கானிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். கார்த்தி நாம் தமிழர் கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி பொருளாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு சகோதரர்கள் வீட்டில் இருந்தனர். மாணிக்கம்பாளையத்தில் வசிக்கும் அவர்களது தாய் மாமன் ஆறுமுகசாமி (50), அவரது அண்ணன் ஈஸ்வரனின் மகன் கவின் (24) அங்கு வந்துள்ளார். அப்போது, சொத்து பிரச்னை தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதை கார்த்தி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். திடீரென ஆறுமுகசாமி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கெளதம், கார்த்தி இருவரையும் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், அண்ணன், தம்பி இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிந்து ஆறுமுகசாமி, கவினை போலீசார் கைது செய்தனர்.