×

தூத்துக்குடியில் அதிக திறன் கொண்ட நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் தளம் 1ல் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட இரண்டு நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் தளம் 1ல் புதிதாக ரூ.325 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை  அமைச்சர் கீதா ஜீவன், மின்சாரம், மதுவிலக்கு  மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமைச்  செயலாளர் இறையன்பு, எரிசக்தித் துறை  செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, இயக்குநர்கள் சிவலிங்கராஜன், இராசேந்திரன், ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தற்போது, தூத்துக்குடி துறைமுகம் தளம்-1 மற்றும் தளம் 2ல் நிலக்கரியை கையாள்வதற்கு சுமார் 50,000 மெட்ரிக் டன் முதல் 55,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிரேனுடன் கூடிய சிறிய கப்பல்கள் மாதம் ஒன்றிற்கு 10 முதல் 12 வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிக அளவு நிலக்கரியை குறுகிய காலத்தில் கையாள்வதற்காகவும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் முழு அளவில் மின் உற்பத்தி தங்கு தடையின்றி நடைபெறுவதற்காகவும், தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் 70,000 மெட்ரிக் டன் முதல் 75,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்களிலிருந்து நிலக்கரியை விரைவாக இறக்குவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் ரூ.325 கோடி செலவில் தூத்துக்குடி துறைமுகம் தளம்-1ல் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட புதிய இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இப்புதிய இயந்திரங்கள் வாயிலாக குறுகிய காலத்தில் 6 முதல் 8 பெரிய கப்பல்கள் மூலம், கப்பல் ஒன்றிற்கு 70,000 டன் முதல் 75,000 டன் வரை அதிக கொள்ளளவு நிலக்கரியை இறக்க முடிவதால் நிலக்கரியை கையாளும் சரக்குக் கட்டணம் டன் ஒன்றிற்கு ரூ.700லிருந்து ரூ.540 ஆக குறையும். இதனால், ஆண்டொன்றிற்கு சுமார் ரூ.80 கோடி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சேமிப்பாகக் கிடைக்கும்.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Tuticorin , Chief Minister M. K. Stalin inaugurated the operations of high capacity coal unloading machines at Tuticorin
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!