புதுக்கோட்டை: விராலிமலை அருகே பாசி வகையை சேர்ந்த அஸோலாவை வளர்த்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் மகளிர் குழு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை பகுதியில் அம்பேத்கர் மற்றும் பொன்னி என்ற இரண்டு மகளிர் குழுக்கள் இயங்கி வருகின்றன. தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவியுடன் இந்த குழுக்களை சேர்ந்த பெண்கள். விவசாயத்திற்கு உதவும் அஸோலா என்ற பாசியை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
நீரில் வளரக்கூடிய அஸோலா நீரினை தமக்குள் தக்கவைக்கும் தன்மை கொண்டது என்பதால் விவசாயத்திற்கு வரப்பிரசாதமாக இது இருக்கும் உதாரணமாக நாற்று நடும் போது வயலில் அஸோலாவையும் போட்டுவைத்தால் நீர் ஆவியாகாமல் தடுப்பதுடன் நீரை நீண்ட நாட்கள் தேக்கி வைத்து செலவும் குறைகிறது. அஸோலாவை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் தீவினமாக அளிக்க முடியும் என்பதால் பல்வேறு தரப்பினரும் தங்களிடமிருந்து வாங்கி செல்வதாக மகளிர் குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அஸோலா வளர்ப்புக்கான தொட்டி 7 அடி நீளமும் 4 அடி அகலமும் 1 அடி உயரமும் இருந்தாலே போதும் இதில் மண்ணை நிரப்பி முக்கால் அடி வரும் வரை தண்ணீரை ஊற்றிய பின்னர் மாட்டுச்சாணம் வேப்பந்தலை உள்ளிட்ட உரங்களை போடவேண்டும். அஸோலாவுக்கென தனியாக விதைகள் எதுவும் இல்லாத நிலையில் அதன் இலைகளை தண்ணீரில் விட்டாலேயே ஒரு வாரத்தில் அது தொட்டி முழுக்க நிரம்பிவிடும்.
குறைந்த செலவில் வளர்க்கப்படும் அஸோலா கிலோ ஒன்றிற்கு ரூ.100 முதல் ரூ.250 வரை விற்கப்படுவதாக கூறுகிறார் அஸோலா வளர்ப்பில் ஈடுபட்டுவரும் புவனேஷ்வரி. விவசாயத்திற்கு உரமாகவும்,கால்நடை தீவினமாகவும் பயன்படும் அஸோலா குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கும் மகளிர் குழுவினர் வீடுகளில் இருக்கும் பெண்கள் கூட எளிதாக வருமானம் ஈட்ட அஸோலா வளர்ப்பு சிறந்த வழி என்றும் தெரிவிக்கின்றனர்.