டெல்லி: ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். விசாகப்பட்டினம் தலைநகராக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது.
ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம், தனியாக பிரிந்த பின்னர், ஹைதராபாத் தெலங்கானாவின் நிரந்தர தலைநகரமானது. இதனால், விஜயவாடா தற்காலிக தலைநகரமாக செயல்பட்டது. அதன்பின்னர் ஆந்திராவுக்கு அமராவதி எனும் புதிய தலைநகரை சந்திரபாபு நாயுடு அறிவித்தார். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்த பின்னர், அமராவதியை தலைநகராக்கும் முடிவை கடுமையாக எதிர்த்து வந்தார்.
பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு அமைந்த பிறகு விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியை சட்டமன்றத் தலைநகரமாகவும், கர்நூலை நீதித்துறையின் தலைநகராகவும் மாற்ற ஆந்திர அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் மூன்று தலைநகர் திட்டத்தை கைவிட்டு, ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினத்தை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.