×

ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு ஒன்று விட்ட சகோதரர் வழக்கு: தீபா, தீபக் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!!

சென்னை: ஜெயலலிதா சொத்தில் பங்கு கேட்டு அவரது ஒன்று விட்ட சகோதரர் வாசுதேவன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அமர்வு, கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் இந்து வாரிசு உரிமை சட்டத்தின்படி ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோரை ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளாக அறிவித்து தீர்ப்பளித்தார்கள். இதையடுத்து போயஸ் கார்டன் சொத்துக்கள், தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூர் வியாசர்புராவை சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். மனுவில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒன்றுவிட்ட சகோதரர் தான் என்றும், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியின் மகன் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கை தான் 2021ம் ஆண்டே சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், ஆனால் சில பிழைகள் காரணமாக மனு திருப்பி அளிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு, தனக்குள்ள இருதய நோய் காரணமாக வழக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியான ஜெயமாலினி மகன்தான் தான் என்றும் தன் தந்தை ஜெயராமன் 2வது மனைவியாக தான் வேதவல்லி என்கிற வேதம்மாவை திருமணம் செய்துகொண்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். 2வது மனைவிக்கு பிறந்தவர்கள் தான் ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா என்று கூறியுள்ள வாசுதேவன், ஜெயக்குமாரின் வாரிசுகள் தான் தீபா, தீபக் என்று சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 1950ம் ஆண்டே ஜெயராமனிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மைசூர் நீதிமன்றத்தில் தனது தாய் தாக்கல் செய்த வழக்கில், அப்போதே ஜெயக்குமார், ஜெயலலிதாவை பிரதிவாதிகளாக சேர்த்ததையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்து வாரிசு உரிமை சட்டப்படி ஜெயலலிதாவின் சொத்துகளில் தனக்கும் பங்கு உள்ளது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக நிர்வாக உத்தரவுக்காக இந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளையான மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த மாஸ்டர் நீதிமன்றம், மனுவை பட்டியலிடுவது தொடர்பாக தீபா, தீபக் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணைக்கு பிப்ரவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


Tags : Jayalalitha ,Madras High Court ,Deepa ,Deepak , Jayalalithaa Property, Share, Brother Case, Chennai High Court
× RELATED ஜெயலலிதா நகைக்கு உரிமை கோரிய தீபாவுக்கு எதிர்ப்பு