×

தற்கொலை படை மூலம் தாக்குதல்: பாகிஸ்தான் மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 90ஆக உயர்வு..!!

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் வழிபாட்டு நேரத்தில் குண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஒருபகுதி சரிந்து இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பில் பலத்த காயம் அடைந்த 150க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயம் அடைந்தோரில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது வரை இந்த தாக்குதலில் சுமார் 90 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் கூறுகின்றனர். தீவிரவாதி ஒருவர் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதனால் தொழுகையில் ஈடுபட்டிருந்த பல போலீசார் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டுவெடிப்பு குறித்து பாகிஸ்தான் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனது சகோதரர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்தி இருப்பதாக தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் கமாண்டர் உமர் காலித் குரசானி கூறியுள்ளார்.

Tags : Pakistan , Pakistan mosque, bomb explosion, death toll 90
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...