×

கடும் பொருளாதார சிக்கலில் தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடுகள்: உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை..!!

இஸ்லாமாபாத்: கடும் பொருளாதார சிக்கலில் இந்தியாவின் அண்டை நாடுகள் தவித்து வருகின்றன. அன்னியச் செலவாணி கையிருப்பு குறைந்துள்ளதால் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அன்னியச்செலாவணி கையிருப்பு சில வாரங்களுக்கு மட்டுமே தாங்கும் அபாய நிலை ஏற்பட்டிருக்கிறது. பிரச்சனைகளை சமாளிக்க கடுமையான சிக்கன நடவடிக்கைகளை பாகிஸ்தான் அமலாக்கியுள்ளது. பாகிஸ்தானில் பணவீக்கம் 24 சதவீதமாக அதிகரித்துள்ளதால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் அன்னியச்செலாவணி கையிருப்பு 3.5 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

கடும் பொருளாதார சிக்கலில் இந்தியாவின் அண்டை நாடுகள் தவித்து வருகின்றன. இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பொருளாதார சிக்கல் தீவிரமடைகிறது. பாகிஸ்தானில் பணவீக்கம் பல மடங்கு உயர்ந்துள்ளதுடன் அன்னியச்செலாவணி கையிருப்பும் குறைந்துள்ளது. பணவீக்கத்தில் இந்தியா 5.72 சதவீதம், பாகிஸ்தான் 24 சதவீதம், இலங்கை 57 சதவீதமாக உள்ளது. அன்னியச்செலாவணி கையிருப்பில் இந்தியா 573 பில்லியன் டாலர், பாகிஸ்தான் 3.5 பில்லியன் டாலர், இலங்கை 3 பில்லியன் டாலராக உள்ளன. ஜிடிபி தரவரிசையில் இந்தியா 5, பாகிஸ்தான் 42, இலங்கை 70 ஆக இருக்கிறது. தவறான பொருளாதார கொள்கைகளே இலங்கை, பாகிஸ்தான் சிக்கலுக்கு காரணம் என நிபுணர்கள் கருத்து கூறுகின்றனர்.

இந்தியாவிற்கு பொருளாதார சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் மிகக்குறைவு என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் நிதி நிர்வாகம் தெளிவான விதிகளுக்குட்பட்டு நடைபெறுவதால் சிக்கல்கள் வர வாய்ப்பு குறைவு என நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்கள் திருப்தி தரும் வகையில் உள்ளதாக அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. கொரோனா பாதிப்புகள், உக்ரைன் போர் போன்ற சிக்கலில் இருந்து இந்தியா பெருமளவு மீண்டுள்ளது. இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ளதுடன் அன்னியச்செலாவணி கையிருப்பு திருப்திகரமாக இருக்கிறது.


Tags : India , Economic crisis, India's neighbours
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...