ஐதராபாத்: தெலங்கானாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய பாஜ அரசு நடத்துகிறது என பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் கே.டி.ராமராவ் குற்றம்சாட்டினார். நிசாமாபாத்தில் அவர் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, “ஒன்றிய பாஜ அரசு தெலங்கானாவுக்கு எந்த புதிய திட்டங்களையும், நிதிஉதவியையும் அறிவிக்கவில்லை. ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ் மாநிலத்திற்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
பாஜ தனது கார்ப்பரேட் நிறுவன நண்பர்கள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்கிறது. அனைவரின் ஆதரவு, அனைவரின் நம்பிக்கை என்று முழங்கும் பாஜவின் செயல்கள் அனைத்தும் குப்பை. இந்தியாவின் பணமதிப்பு அதலபாதாளத்தில் உள்ளது. கடன்சுமை விண்ணை முட்டுகிறது. பாஜ அரசு தைரியமிருந்தால் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்தட்டும். அதனை சந்திக்க பிஆர்எஸ் கட்சி தயார்” இவ்வாறு கூறினார்.