திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் இலவச தரிசன வரிசை, ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதலாக பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன்படி நேற்று முன்தினம் 80 ஆயிரத்து 94 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 32 ஆயிரத்து 219 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.
உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில், ரூ.3 கோடியே 15 லட்சம் காணிக்கையாக கிடைத்தது. நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 14 அறைகள் முழுவதும் பக்தர்களால் நிரம்பியது. இவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 20 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.