சென்னை: சென்னை அருகே திருவேற்காடு நகராட்சி, சிவன் கோயில் தெரு மைதானத்தில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். இந்த உணவு திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 80 அரங்குகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது;
300 மாணவர்கள் பங்கேற்று 120 சதுர அடியில் 365 வகையான சிறுதானியங்களை கொண்டு, உலகின் மிகப்பெரிய ஓவியம் வரைந்து உலக சாதனை படைத்துள்ளனர். சிறுதானியங்கள் மூலம் அதிகளவில் உணவுகள் சமைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. இதில் மக்களுக்கு பிடிக்கும் வகையில் குதிரை வாலி கிச்சடி, வரகு மல்லி பொங்கல், கேழ்வரகு கேக், கம்பு கட்லெட், மில்லட் பீட்சா, மில்லட் பர்கர், தினை லட்டு என்று மருத்துவ குணங்கள் நிறைந்த சிறுதானிய உணவு வகைகளை, சமையல் வல்லுனர்கள் பொதுமக்கள் முன்னிலையில் நேரடியாக செய்து காட்டினர். அதை விற்பனைக்கும் வைத்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான் சிறுதானிய உணவிற்கு தனி நிதிநிலை அறிக்கை பெறப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி 25ம் ஆண்டு கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பாக நடைபெறும் சிறுதானிய உணவு திருவிழா நிகழ்ச்சி பாராட்டக்கூடியது என்றார். முன்னதாக உணவு திருவிழாவில் 2 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.
முதலாவதாக அரசு பள்ளிகளை சேர்த்த 300 மாணவர்கள் இணைந்து சிறுதானியங்களை கொண்டு திருவள்ளூர் மாவட்ட வரைபடம் மற்றும் உணவு பாதுகாப்பு இலச்சினைகளை 120 சதுர அடியில் சிறுதானிய ஓவியமாக உருவாக்கி இருந்தனர். இதற்கு வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் என்ற நிறுவனத்தினர் அங்கீகரித்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை அமைச்சரிடம் வழங்கினர்.