பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் வெட்டி 16.5 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற 2 நபர்களை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரியபாளையம் அருகே ஆரணி, மல்லியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார்.
காய்கறி வியாபாரி. இவர், ஆணி பகுதிகளில் காய்கறிகளை வாங்கி, நாள்தோறும் சென்னை கொடுங்கையூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவது வழக்கம். இவருக்கு மனைவி மாலதி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதற்கிடையே, கடந்த 23ம் தேதி உதயகுமார் காய்கறி வியாபாரத்துக்காக சென்னை சென்றிருந்தார். 2 மகள்களும் பள்ளிக்கு சென்றுவிட்டதால், வீட்டில் மாலதி மட்டும் தனியே இருந்துள்ளார்.
இந்நிலையில், அன்று மதியம் மாலதி வீட்டில் தனியே இருப்பதை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள், வீட்டின் பின்புறம் வழியாக ஒரு மர்ம நபர் மாடிக்கு ஏறி, அங்கிருந்து முகமூடி அணிந்தபடி வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் மாலதியை கத்திமுனையில் மிரட்டி, பீரோ சாவியை கேட்டுள்ளனர். அவர் தர மறுத்து, மர்ம நபரின் கட்டை விரலை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமான மர்ம நபர், மாலதியை கத்தியால் சரமாரி வெட்டி கட்டிப் போட்டுவிட்டு, பீரோவில் இருந்த 16.5 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சத்தை கொள்ளையடித்து கொண்டு பைக்கில் தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயத்துடன் மாலதி அலறி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மாலதியை மீட்டனர். பின்னர் அவரை பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆரணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். மேலும், இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், தன்னை மர்ம நபர் தாக்கி வெட்டியபோது, வலிதாங்காமல் அவரது கட்டை விரலை மாலதி கடித்ததாகவும் தெரியவந்தது.
சிசிடிவி காமிரா பதிவுகளில் இருந்த பைக்கின் பதிவெண்ணை வைத்து, அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தபோது எதுவும் தெரியாதது போல் நழுவி சென்றனர். இதைத் தொடர்ந்து சந்தேகத்தின்பேரில் நேற்று மாலை மீண்டும் அந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (22), ஜெய்பீ (24) எனத் தெரியவந்தது. இதில் ஒரு வாலிபரின் கட்டைவிரலில் மாலதி கடித்த காயம் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசாரின் கிடுக்கிப்பிடியில் இருவரும் மாலதியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், சின்னம்பேடு ஏரியில் துணிமூட்டையில் கட்டி போடப்பட்டு இருந்த 16.5 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் விசாரணையில் தொய்வு ஏற்பட்டபோதிலும், மர்ம நபரின் கட்டை விரலில் மாலதி கடித்த காயங்களை அடையாளமாக வைத்து விசாரணையை துரிதப்படுத்தி 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர் என குறிப்பிடத்தக்கது.