×

புதுகை, திருச்சியில் ஜல்லிக்கட்டு; 1,200 காளைகள் ஆக்ரோஷம்: அடக்கப் பாய்ந்த 600 வீரர்கள்

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த வேந்தம்பட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் பங்கேற்கே திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. கால்நடை மருத்துவ குழுவினர், காளைகளுக்கு பரிசோதனை செய்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இறுதியாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இன்று காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை போட்டி போட்டு வீரர்கள் அடக்கினர். பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து களத்தில் நின்று விளையாடியது. காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு கட்டில், பீரோ, மிக்சி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசு வழங்கப்பட்டது.

இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளத்தில் புனித வனத்து அந்தோணியார் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

இறுதியாக 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இன்று காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ரங்கம் ஆர்டிஓ செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். களத்தில் சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். பல காளைகள் பிடிபடாமல் சென்றது. காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்ளுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், மிக்சி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது.

Tags : Jallikattu ,Tiruchi , Jallikattu in Pudugai, Trichy; 1,200 Bulls Aggressive: 600 Soldiers Rushed
× RELATED ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் படம்