×

பழனி முருகன் கோயிலில் ஆகம விதிகளின்படியே மண்டல பூஜை நடக்கிறது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

சென்னை: பழனி முருகன் கோயிலில் 48 நாட்கள் மண்டல பூஜை, தைப்பூசத் திருவிழாவால் எந்த தடையும் இல்லாமல் ஆகம விதிப்படியே நடைபெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ஆர் ரமேஷ் என்பவர் அவசர மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி முருகன் கோயிலில் 48 நாட்கள் மண்டல பூஜை பெயரளவிலேயே நடைபெறுகிறது. ஆகம விதிப்படி நடைபெறவில்லை. தைப்பூச திருவிழா நடைபெறுவதால் மண்டல பூஜை தடைபட வாய்ப்புள்ளது. எனவே, ஆகம விதிப்படி மண்டல பூஜை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நேற்று விடுமுறை என்பதால் பொறுப்பு தலைமை நீதிபதி வீட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது இந்து அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தைப்பூசத் திருவிழாவால் மண்டல பூஜை எந்த வகையிலும் தடைபடாது. 48 நாட்கள் மண்டல பூஜையில் 11 கலசங்கள் வைத்து பூஜை நடைபெறும். இறுதி நாளில் 1008 சங்கு பூஜைகள் நடைபெறும். ஆகம விதிப்படியே அனைத்தும் நடைபெறுகிறது என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : Palani Murugan temple ,High Court , Mandal Pooja is being conducted in Palani Murugan temple as per Agama rules: Charities department informs High Court
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...