×

கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது; களக்காடு பகுதியில் 20 வகையான நீர் பறவைகள்

களக்காடு: களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் நீர்நிலைகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது. இதில் 20க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வாழ்வது கண்டறியப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி வடிநில பகுதியின் நீர்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியது. அதன்படி களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பெரியகுளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது.

பறவைகள் ஆராய்ச்சியாளர் மரிய அந்தோணி தலைமையில், கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர், தன்னார்வலர்கள் 15 பேர் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை திருக்குறுங்குடி வனசரகர் யோகேஸ்வரன் தொடங்கி வைத்தார். பறவைகள் கணக்கெடுப்பது பற்றி குழுவினருக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கணக்கெடுப்பு குழுவினர் திருக்குறுங்குடி பெரியகுளம், ஊச்சிகுளம், செங்களாகுறிச்சி குளம், கொடுமுடியாறு அணை, பச்சையாறு அணை பகுதிகளுக்கு சென்று அங்கு வாழும் பறவைகள் குறித்து கணக்கெடுத்தனர்.

இதில் களக்காடு பகுதியில் கூலகிடா, முக்குளிப்பான், மீசை ஆலா, சிறு கொக்கு, நெட்டை கொக்கு, குளத்து கொக்கு, அரிவாள் மூக்கன், வர்ண நாரை, சின்ன அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், சங்கு வளை நாரை, ஊசிவாய்தாரா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையிலான பறவைகள் வாழ்வது கண்டறியப்பட்டது. இதில் ஊசிவாய்தாரா என்ற வகை பறவை சைபிரியா நாட்டை சேர்ந்தது ஆகும். இதுபோல நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திலும் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது. இந்த கணக்கெடுப்பு பணிகள் நாளை வரை நடைபெறும் என்றும் கணக்கெடுபு குழுவினர் தெரிவித்தனர்.

Tags : Kalakadu , Bird Survey, Kalakadu, 20 species of water birds
× RELATED களக்காடு அருகே குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு