சென்னை: மணலி மண்டலம், 21வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் தெருவில் மாநகராட்சியின் இ-சேவை மையம் உள்ளது. இங்கு, மின்சார கட்டணம் செலுத்துதல், வீட்டு வரி, தொழில் வரி செலுத்துதல் மற்றும் வருவாய்த்துறை, மாநகராட்சி தொடர்பான விண்ணப்பங்கள் போன்றவைகளுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் குடியரசு தினம் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டு, நேற்று வழக்கம்போல் பெண் ஊழியர்கள் இ-சேவை மையத்திற்கு வந்தனர்.
அப்போது, மையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கம்ப்யூட்டருக்கு பயன்படுத்தப்படும் விலை உயர்ந்த 2 இன்வெர்ட்டர்கள் திருடிபோனது தெரிந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், மணலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, இன்வெர்ட்டர்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.