சென்னை: தேமுதிக கட்சி பிரமுகர் திருமண நிகழ்ச்சிக்கு பின் திருத்தணி மலைக் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று திருத்தணி மலைக்கோயில் நடந்த தேமுதிக கட்சி பிரமுகர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து, திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்தி விட்டு பின்னர் திருத்தணி மலைக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலின் நுழைவாயிலுக்கு சென்றார். அப்போது, கோயில் கதவு திறக்கப்படாததால் சுமார் ஒரு மணி நேரம் கோயிலின் விஐபி கேட்டுக்கு வெளியில் காத்திருந்தார்.
அப்போது, அவருடன் மாநில துணை செயலாளர் சுதீஷ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேமுதிக நிர்வாகிகள் உடன் இருந்தனர். நீண்ட நேரம் போராடியும் கோயில் கதவு திறக்காததால் இது குறித்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் நுழைவாயில் கேட்டு திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சதீஷ் ஆகியோர் முருகர், வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டு திரும்பி சென்றனர்.
தேமுதிக நிர்வாகிகள் கூறுகையில், சாமிக்கு அபிஷேக கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மாநில கட்சி பொருளாளரான பிரேமலதாவிஜயகாந்திற்கு உரிய மரியாதை தராமல் அலட்சியம் செய்து அவமானம்படுத்தி உள்ளார் துணை ஆணையர் விஜயா. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் விஜபிகள் பயன்படுத்தும் நுழைவு வாயில் வழியாக தரிசனத்திற்கு உள்ளே அனுமதி கொடுக்கிறார். எனவே, இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.