சென்னை: நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி ரூ.40 கோடி செலவில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக,
சென்னை நந்தனம் எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாக உள்ள இடத்தில் பொதுப்பணித்துறையிடமிருந்து பெறப்பட்டுள்ள மதிப்பீட்டறிக்கையின் அடிப்படையில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் சுமார் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டிடம் கட்டுவதற்கு ரூ.44.50 கோடி பொதுப்பணித்துறையின் மூலம் கட்ட ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் 484 கல்லூரி மாணவர்கள் பயன் அடைவர். தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.