மும்பை: தனது மகளின் கல்யாண பரிசாக ரூ. 50 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களாவை பரிசாக அளித்ததாக வெளியாகும் செய்திகளை நடிகர் சுனில் ஷெட்டி தரப்பு மறுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகையும், நடிகர் சுனில் ஷெட்டியின் மகளுமான அதியா ஷெட்டிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை அள்ளி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக புதுமணத் தம்பதிகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரூ.2.2 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரும், எம்.எஸ்.தோனி சார்பில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நிஞ்ஜா பைக் பரிசாக அளித்ததாகவும் கூறப்பட்டது.
அதியா ஷெட்டி தந்தையான சுனில் ஷெட்டி, தனது மகளின் கல்யாண பரிசாக ரூ. 50 கோடி மதிப்பிலான ஆடம்பர பங்களாவை பரிசாக அளித்ததாக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதுகுறித்து சுனில் ஷெட்டிக்கு ெநருக்கமானவர்களை தொடர்பு கொண்டபோது, ‘பல கோடி ரூபாய் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானது, ஆதாரமற்றது. இதுபோன்ற தகவல்களை பொது களத்தில் வெளியிடும் முன் எங்களிடம் தகவல்களை உறுதிப்படுத்துமாறு பத்திரிகையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்’ என்றனர்.