சென்னை: திமுக கூட்டணி கட்சியினர் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஆனால், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை எதிரணியினரை காணவில்லை என்று கே.எஸ்.அழகிரி கூறினார். இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மதவெறியை தடுத்து மக்களிடையே ஆன்மிகத்தையும், சகோதரத்துவத்தையும் பரப்புவது தான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை. அதை நாங்கள் இன்று கடைபிடிக்கிறோம். ராகுல்காந்தியின் கடிதத்தை ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு நபராக இன்று முதல் வழங்க உள்ளோம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எங்களுக்கு ஆதரவளித்துள்ளது. எங்கள் வேட்பாளருக்கு, கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனர். ஒத்த கருத்துடையவர்கள் பல்வேறு மேடைகளில் இருந்தாலும் அவர்களை எல்லாம் ஒரே மேடைக்கு அழைத்து வந்து ஒன்றுபடுத்த வேண்டும் என்று ராகுல்காந்தியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் முடிவு செய்து, தமிழகத்தில் அந்த பணியை முதல்வர் வெற்றிகரமாக செய்துள்ளார். இன்று எங்கள் மேடைக்கு கமல்ஹாசன் வந்துள்ளார். அவரை வரவேற்கிறோம்.
காஷ்மீரில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு நாள் விழாவில், நான் பங்கேற்கிறேன். இதில் பங்கேற்க தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் களத்தில் நாங்கள் பணியாற்றுகிறோம். மகத்தான வெற்றி எங்களுக்கு இருக்கிறது. எங்களது கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் அங்கு பம்பரமாக சுழன்று பணியாற்றுகின்றனர். ஆனால், எங்கள் எதிர்தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் காணப்படவே இல்லை. இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.