×

மண்டைக்காடு கோயிலில் மாசிக்கொடைக்கு முன்பு திருப்பணிகள் நிறைவடையுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு

குளச்சல்: குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. பெண்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. கடந்த 2021  ஜூன் 2ம் தேதி இக்கோயிலின் கருவறைக்கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து கோயிலில்  தற்காலிகமாக மேற்கூரை அமைக்கப்பட்டது.

 தொடர்ந்து ஜூன் 14ம் தேதி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. தேவ பிரசன்னத்தில் ஆகம விதி மாறாமல் திருப்பணிகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து  நவம்பர் 24ம் தேதி ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அன்று தேவ பிரசன்னத்தில் கூறியப்படி வாஸ்துப்படி திருப்பணிகள் நடத்த வேண்டும் என இந்து இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து கோயில் தந்திரி தலைமையில் இந்து இயக்க பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து குழு அமைத்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே முதலில் செய்யப்பட்ட பரிகார பூஜைகளை அம்மன் ஏற்று கொண்டாரா?என்பதை அறிய  டிசம்பர் 22ம் தேதி ஜோதிட பிரசன்னம் பார்க்கப்பட்டது. திருவனந்தபுரம் ஜோதிடர் கண்ணன் நாயர் ஜோதிட பிரசன்னம் பார்த்தார். அதில் அம்மன் கோபம் தணியவில்லை. அம்மனின் தீக்காயங்களை ஆராய்ந்து சுத்தமான சந்தனம் அரைத்து பூச வேண்டும். உடனே இதை செய்யாவிட்டால் நாட்டிற்கு கேடு விளையும். குரு சன்னதியில் முறையாக பூஜை நடக்கவில்லை. காலம் காலமாக ஆச்சார அனுஷ்டானங்களுடன் நடந்து வந்த பூஜைகளை முறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து 2022 ஜனவரி 8ம் தேதி  குரு சன்னதியில் பரிகார பூஜை நடந்தது. கடந்த ஜூலை மாதம் திருவட்டார் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள திருவட்டார் வந்த அமைச்சர் சேகர்பாபு மண்டைக்காடு வந்து திருப்பணிக்காக நடந்து வந்த மர வேலைகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார். மர வேலைகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த அக்டோபர் 6ம் தேதி  கோயில் மேற்கூரையில் அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகை அகற்றும் பணி தொடங்கியது. ஆகம விதிக்குட்பட்டு புதிய உத்திரம், பட்டியல்,கழிக்கோல் அமைத்து மேற்கூரை அமைக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்தது. இதற்காக தேவசம் பள்ளி வளாகத்தில் தச்சு தொழிலாளர்கள் முழுமூச்சில் மரப்பணி செய்து வருகின்றனர்.

 6 தச்சு தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மேற்கூரை பணிக்கு உத்திரம்,பட்டியல் கூட்டும் பணி  நடந்து வருகிறது.இந்த பணிகள் நிறைவடைந்ததும் திருக்கோயில் மேற்கூரையில் பொருத்தப்படும். இந்த வருடத்தின் மாசிக்கொடை விழா வரும் மார்ச் 5ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதற்கானபந்தல் கால் நாட்டு விழா தைப்பூசம் நாளாகிய வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. மாசிக்கொடைக்கு முன்பு கோயில் திருப்பணிகளை செய்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Masikkodai ,Mandaikkadu , Devotees wait for Mandaikkadu Temple, Masikkodai
× RELATED மண்டைக்காடு கோயில் மாசிக்கொடை இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை