சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்களை பற்றி பொதுமக்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதும், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதும், தமிழக பாஜ கட்சியின் கடமையாகக் கருதுகிறேன். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல், கடந்த சில மாதங்களில் 5 மின் ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது, மேலும் பல மின் ஊழியர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மின் துறையில் பணிபுரிபவர்களுக்கு, பாதுகாப்பு என்பது மிக முக்கியமான தேவையாகும். அவர்கள் பணிச் சூழலை அவ்வப்போது கவனமாக ஆய்வு செய்து, அனைத்து வகையான மின் ஆபத்துகள், வெள்ளம் மற்றும் உயர் மின்னழுத்த பகுதிகளைச் சுற்றியுள்ள மின் கம்பங்களில் பணிபுரிவதால் ஏற்படும் ஆபத்து, சரியான பாதுகாப்பு உபகரணங்கள் அணியாததால் ஏற்படும் அபாயம் குறித்து அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். மின்சாரத்தால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க, அவர்களுக்குத் தேவையான தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.