ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திட்ட பணிகள் மேற்கொள்ள கடந்த மாதம் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இதில், பங்கேற்க ஒப்பந்ததாரர்கள் தங்களது ஆவணங்களை பதிவு செய்தனர். கடந்த மாதம் 21ம் தேதி டெண்டர் தொடர்பாக ஆற்காடு தபால் நிலையத்தின் முத்திரையிட்ட கடிதத்தை அதிமுக நகர செயலாளர் சங்கர் நகராட்சியில் வழங்கினார்.
இதுபற்றிய புகாரையடுத்து, ஆற்காடு அஞ்சல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அரக்கோணம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் சிவசங்கர் தலைமையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில், அஞ்சல் அலுவலகத்தில் சிறு சேமிப்பு பிரிவு ஏஜென்டு ஜெய்சிங், தற்காலிக துப்புரவு ஊழியர் பிச்சை ஆகியோர் லஞ்சம் பெற்று முறைகேடாக டெண்டர் கடிதத்தில் முத்திரையிட்டது தெரியவந்தது.
தபால் அதிகாரி மற்றும் போஸ்ட்மேனுக்கு தெரியாமல் கடிதத்தை ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் வழங்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து, இதுபற்றிய புகாரின்படி ஆற்காடு டவுன் போலீசார், ஒப்பந்ததாரர்கள் பிச்சாண்டி, அவரது மகன் ராகேஷ் என்கிற ராஜேந்திரன், ராணிப்பேட்டையை சேர்ந்த சேதுராமன், அதிமுக நகர செயலாளர் சங்கர், அஞ்சலக சிறுசேமிப்பு ஏஜென்ட் ஜெய்சிங், தற்காலிக துப்புரவு ஊழியர் பிச்சை ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.