பழநி: பழநி முருகன் கோயிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாளை கோயில் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுதினம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தற்போது முழுவீச்சில் கோயிலில் இறுதிக்கட்ட வண்ணம் பூசும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன.
கும்பாபிஷே கத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 18ம் தேதி துவங்கின. கடந்த 22ம் தேதி மாலை 8 கால வேள்விகளில் முதற்கால யாக வேள்வி துவங்கியது. இதற்காக பாரவேல் மண்டபத்தில் 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. தற்போது இரவு பகலாக யாக வேள்விகள், ஓதுவார் பாராயணங்கள் நடந்து வருகின்றன. நாளை பாதவிநாயகர், சேத்ரபாலர், கிரிவீதியில் உள்ள 5 மயில் சிலைகள், படிப்பாதை, விநாயகர் சன்னதிகள், இடும்பன், கடம்பன், அகஸ்தியர் என படிப்பாதையில் உள்ள அனைத்து உபசன்னதிகளின் கோபுரங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்ச்சியாக நாளை மறுதினம் மலைக்கோயில் ராஜகோபுரம், தங்க கோபுரம் மற்றும் பிரகார தெய்வங்களின் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.