×

2022ம் ஆண்டின் ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக சூர்யாகுமார் யாதவ் தேர்வு!

மும்பை: 2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தட்டி சென்றார். டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யாகுமார் யாதவ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் சூர்யாகுமார் யாதவ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் சூர்யாகுமார் யாதவ் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை அரையிறுதி வரை அழைத்துச்சென்றனர்.

மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இலங்கை அணியுடனான தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

பின்னர் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச அளவில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். அடுத்து நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் சூர்யாகுமார் யாதவ் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2022ம் ஆண்டின் ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக சூர்யாகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.

Tags : Suryakumar Yadav ,ICC T20 , Suryakumar Yadav selected as the best player of the ICC T20 cricket tournament of 2022!
× RELATED சூர்யகுமார் யாதவ் மீண்டும் மும்பை...