×

சமையலறையில் காஸ் கசிந்து தீப்பிடித்ததில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை பலி

பெரம்பூர்: பெரம்பூர் ரமணா நகர் சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர் தாட்சாயினி (85). இவர், சென்னை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக சொந்த வீட்டில் வசித்து வந்தார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு குடும்பங்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீட்டில் உள்ள சமையல் அறையில் காஸ் ஸ்டவ்வை ஆன் செய்துவிட்டு அருகில் லைட்டர் எதுவும் இல்லாததால் தாமதமாக காஸ் ஸ்டவ்வை  பற்ற வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் சமையல் அறை முழுவதும் காஸ் கசிந்து பரவியதால் குபீரென தீப்பிடித்து தாட்சாயினி உடல் முழுவதும் தீயில் கருகியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து உடனடியாக தீயை அணைத்து செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் வருவதற்குள் உடல் முழுவதும் கருகி தாட்சாயினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செம்பியம் போலீசார் தாட்சாயினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக பொதுமக்கள் தீயை அணைத்ததால் வீட்டில் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தொடர்ந்து, செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Cass , Retired headmistress killed in gas leak in kitchen
× RELATED காஸ் கசிவால் தீபிடித்து பொருட்கள் எரிந்து நாசம்